சென்னை: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வந்தே மாதரத்தை பாடும்போது இடையூறு செய்தால் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத் திருத்தத்தை சட்டமாக்கியுள்ளது. இதுதொடர்பாக அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறியதாவது:குறிப்பிட்ட மதக்கடவுளை போற்றிப் பாடும் வந்தே மாதரத்தை எல்லோர் மீதும் திணிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. வந்தே மாதரம் இந்திய நாட்டைப் பற்றிய பாடல் இல்லை; அது ஒருங்கிணைந்த வங்காள தேசத்தின் பாடல். தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்ற சொல் வந்தே மாதரத்தில் கிடையாது.
மகாகவி பாரதியார் எழுதிய வந்தே மாதரம் பாடலை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? சாதி, மதம் ஒழிய வேண்டும், 30 கோடி மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாரதி பாடினார். அதை தேசியப் பாடலாக அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் கூட தேசிய கீதம் வந்தேமாதரமும் பாடவேண்டிய அவசியம் கிடையாது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் செய்தது அயோக்கியத்தனமானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
