பெரம்பலூர், ஆக. 1: பெரம்பலூரில் பயிர்க் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் நேற்று சங்குப்பேட்டை அருகே இயங்கி வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் பயிர்கடன்களைத் தள்ளுபடி செய்து தருமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, நொச்சியம், அரணாரை, நெடுவாசல், விளாமுத்தூர், கோனேரி பாளையம், எளம்பலூர், செங்குணம், அருமடல், கவுல்பாளையம், தண்ணீர்பந்தல், துறைமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பெரம்பலூர் தெற்கு மாவட்டச்செயலாளர் மருதரசன், வடக்கு மாவட்டச் செயலாளர் அகரம் ஆனந்த் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பையா, பெரம்பலூர் நகரச் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிவிட்டு பின்னர் கோரிக்கை மனுக்களை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
