விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.15 லட்சம் கோடியை ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டத்திற்கு 5,070 கோடி, பிரதமர் கிஷான் சமன் நிதி திட்டத்திற்கு ரூ.3,15,614 கோடி, கேலோ இந்தியா திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு நிதியுதவி திட்டத்திற்கு ரூ.36,441 கோடி, சமுத்ரா மந்தன் திட்டத்திற்கு ரூ.84,084 கோடி என மொத்தம் ரூ.4,41,209 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்விவரம் வருமாறு: பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்தத் திட்டத்தின்படி நீர்நிலைகள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் குளங்கள் மீது சூரிய மின் தகடுகள் அமைத்து சூர்ய மின்சக்தி உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போது 700 மெகாவாட் மிதக்கும் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 7 மடங்காக உயர்த்தி 5 ஆயிரம் மெகாவாட் மிதக்கும் சூரிய மின் தகடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ரூ.5070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 16,000 முதல் 17,000 வரையிலான முழுநேர வேலைவாய்ப்புகளை உருவாக்க இது உதவும். பிஎம் கிஷான் திட்டம்: விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமர் கிஷான் திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரையிலான அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,15,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்தொகை மூன்று சம தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா திட்டம்:

விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய திறமை மேம்பாடு, கல்வியுடன் ஒருங்கிணைப்பு, விளையாட்டு அறிவியல் ஆகியவை வாயிலாக நாட்டின் விளையாட்டு சூழலை மாற்றியமைக்கும் கேலோ இந்தியா திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.29,054 கோடி துக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் தடகள போட்டிகளுக்கான ஏற்பாடுகள், சிறந்த நிர்வாகம், மற்றும் உலக தரத்தில் போட்டிகளை நடத்த தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க ரூ.7,387 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 8 மடங்கு அதிகமான நிதியாகும். சமுத்ரா மந்தன் திட்டம்: இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியவும் உருவாக்கப்பட்ட சமுத்ர மந்தன் திட்டத்துக்கு ரூ.84,084 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் தோண்டப்படும் ஒவ்வொரு கிணறுக்கும் ரூ. 650 கோடி வரை அரசு நிதியுதவி வழங்கும்.

கண்டறியப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை உற்பத்தி நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பொதுவான உள்கட்டமைப்பிற்கு நிதியளிப்பதற்காக மேலும் ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கடல்சார் தரவு சேகரிப்பிற்கு ரூ. 28,534 கோடியும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை மேம்படுத்துவதற்கு ரூ. 2,000 கோடியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

Related Stories: