பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

 

சென்னை: பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி;

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் ரூ.75,000ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.

பொய்க்கால் குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் 6.8.2026 அன்று தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அதிமுக சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: