ரூ.2.2 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் கைது: ஜார்க்கண்ட் போலீசார் அதிரடி

ராஞ்சி: நாடு முழுவதும் 175 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சல் தலைவன் மிசிர் பெஸ்ரா கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மற்றும் கிரிதி மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆபரேஷன் தவுரா பஹத் ‘ஆபரேஷன் தவுரா பஹத்’ என்ற பெயரில் நடந்த இந்த தேடுதல் வேட்டையில், பர்வட்டா அருகே மனியாத் கிராமத்தில் பதுங்கியிருந்த முக்கிய நக்சல் தலைவர் மிசிர் பெஸ்ரா (65) உட்பட 3 பேர் சிக்கினர். இவர்களில் மிசிர் பெஸ்ரா மீது, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இவருக்கு எதிராக 140 முதல் 175க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு, ரூ.2.2 கோடி சன்மானம் அளிக்கப்படும் என ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

இவரது கைது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஜார்க்கண்ட் போலீஸ் டி.ஜி.பி., தடாஷா மிஸ்ரா தெரிவித்தார். இவருடன் கைது செய்யப்பட்ட மற்ற கூட்டாளிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஜார்க்கண்ட் மாநில போலீஸ் ஐ.ஜி., நரேந்திர சிங் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1980 முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர். மேலும், பீகாரின் ஜெஹானாபாத் சிறை உடைப்பு வழக்கு, பல்வேறு வங்கி கொள்ளைகள், பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை சூறையாடுதல் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பல வன்முறை செயல்களில் தொடர்புடையவர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களில் ஒருவர்’ என்றார்.

Related Stories: