செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக, ஆகஸ்ட் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்குப் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
