உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: மாணவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் விவகாரத்தில் அமித்ஷாவை பதவி நீக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். டெல்லி மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது அமித்ஷா தான் என்று குற்றம் சாட்டியதால் ஏற்பட்ட அமளியால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பேச்சை முடிக்க முடியவில்லை. இதுபற்றி நேற்று டெல்லியில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. நான் பேசுவதற்கு ஏதுவாக அவையில் ஒழுங்கைக் கொண்டுவருமாறு சபாநாயகரிடம் பலமுறை கோரினேன். பலமுறை ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் பேச அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி நான் பேசிய காரணத்தைக் கூறி எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நடத்தப்பட்ட அந்த வன்முறைக்கு அமித்ஷாதான் பொறுப்பு என்று நான் கூறினேன். நான் மன்னிப்பு கேட்டால் பேச அனுமதிக்கப்படுவேன் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். நாட்டிற்கு முக்கியமான பிரச்னைகளை எழுப்புவது எனது உரிமை. நமது மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொடுமைப்படுத்தல் என்பது ஒரு அடிப்படைப் பிரச்னை. அமித்ஷா தான் மாணவர்களை தாக்கியவர், அடித்து உதைத்தவர், அவமானப்படுத்தியவர் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டவர்.

எனவே அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். மேலும் காவல்துறை அத்துமீறல்கள் என்று கூறப்படும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் மாணவர்கள் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதிக்கு காரணமான டெல்லி காவல்துறை, அமித்ஷா நிர்வகிக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

அத்துடன், துணை ராணுவப் படையான சிஆர்பிஎப் கீழ் வரும் ஆர்ஏஎப் படையும் உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது . தாக்குதல் நடத்திய மற்றும் எங்கள் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்தப் படைகள் அனைத்தும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளவைதான். டெல்லியில் அரியானா காவல்துறையோ அல்லது உத்தரப்பிரதேச காவல்துறையோ செயல்படவில்லை. டெல்லி காவல்துறையும் ஆர்ஏஎப் படையும் மட்டுமே செயல்படுகின்றன.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அது இன்றைக்கு இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்போதாவது ஒருமுறை நிச்சயம் நடக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இதைச் செய்வது எங்களுக்கு மிகவும் எளிது. எங்களிடம் அதற்கான புகைப்படங்கள் உள்ளன. நாங்கள் அனைத்து காணொளிகளையும் புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். இதைச் செய்த காவலர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் மிகவும் புத்திசாலி என்று நினைக்கலாம். ஆனால், இதற்கான பொறுப்புக்கூறல் நிச்சயம் வரும். இது எங்கள் உறுதிமொழி. மாணவர்களுக்கு நாங்கள் (எதிர்க்கட்சியினர்) அளிக்கும் உறுதிமொழி இதுவே. இவ்வாறு கூறினார்.

* ராகுல் கூறுவது பொய்
அமித் ஷாவின் உத்தரவின் பேரில் போலீசார் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராகுல் காந்தி கூறியதை பாஜ பொய் என்று நிராகரித்தது. பா.ஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,’ பயத்தின் காரணமாகவே அமித் ஷா 30 கார்கள் கொண்ட அணிவகுப்பில் (கான்வாய்) செல்கிறார் என்று ராகுல்காந்தி கூறினார். இது பொய். மேலும் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார். அவர் பொய் சொன்னார்.

எந்தத் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டதாகவும் அவர் பொய் சொன்னார். எந்தத் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படாத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது குறித்த கேள்விக்கே இடமில்லையே?. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததால், பொய்யான தகவல்களைப் பரப்பி குழப்பத்தையும் அராஜகத்தையும் தூண்டும் செயலில் ராகுல் காந்தியும் காங்கிரசும் ஈடுபட்டுள்ளது’ என்றார்.

* பெல்லட் குண்டு, ஆணி தடிகள் பயன்படுத்தப்பட்டது உண்மை
ராகுல்காந்தி கூறும்போது,’ டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் மூலம் சுடப்பட்டது. பெல்லட் குண்டு பாய்ந்த ஒரு சிறுவன் தனது கண் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளது; அவனுக்குப் பார்வை கிடைக்காமலே போகலாம்.

பெல்லட் துப்பாக்கியால் அவன் சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் எய்ம்ஸ் மருத்துவச் சான்றிதழை நான் பார்த்தேன். சாதாரண தடிகளுக்குப் பதிலாக, ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகளும், மின் அதிர்வை ஏற்படுத்தும் ‘ஷாக் பேட்டன்களும்’ பயன்படுத்தப்பட்டன. காவல்துறைக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது? போராட்டக் களத்தில் சீருடை அணியாத காவலர்களும் இருந்தனர். அவர்களை அங்கு பணியமர்த்தியது ஏன்?’ என்றார்.

* ஒரு போன் இருந்தால் மோடிக்கு ஜென் ஸி தொடர்பு வருமா?
ஜென்-ஸி தலைமுறையினருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, வெறும் முகத்திற்கு முன்னால் ஒரு கைபேசியை வைத்துக்கொள்வது மட்டும் போதாது என்று கூறி, பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தார். அவர் கூறுகையில்,’தங்கள் முகத்திற்கு முன்னால் ஒரு கைபேசியை வைத்துக்கொண்டால் மட்டும், தாங்கள் ஜென் ஸி தலைமுறையினருடன் எளிதாகத் தொடர்புகொள்ளக்கூடிய ஒருவராக மாறிவிடுவதாகப் பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் அது உண்மையல்ல. உங்கள் பிம்பம் தான் இங்குள்ள பிரச்சனை. இந்த மாணவர்களுக்கு நீங்கள் இழைத்த கொடுமைகள்தான் பிரச்சனை ‘ என்றார்.

Related Stories: