சபரிமலை கோயில் நடை ஆக. 2ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்:நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும். நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வைத்து பூஜை நடத்தப்படுவது தான் நிறை புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இவ்வருட நிறை புத்திரிசி பூஜை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். காலை 5.40 மணிக்கும், 6.20 மணிக்கும் இடையே உள்ள நேரத்தில் நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெறும். இதன்பின்னர் பூஜை நடத்தப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

Related Stories: