திருவனந்தபுரம்: ஷியாம் கிருஷ்ணன் என்பவர் கேரள அரசு தேர்வாணைய தலைவருக்கு ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: நான் திட்ட வாரிய தலைமைப் பதவிக்கான தேர்வு எழுதினேன். அதில் 54 மதிப்பெண்களுக்கான 10 கேள்விகளுக்கு நான் எழுதிய விடைகளுக்கு எனக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு கேரள அரசு தேர்வாணையம் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஜி அஜீதா பேகம் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வந்தது. இதில் அரசு தேர்வாணைய தேர்வுகளை நடத்தியதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு தேர்வாணைய அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான விசாரணை அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.
