கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற ஒன்றிய பாஜக அரசு தவறியதால் பிரபலங்கள் நேரடியாக களமிறங்கியுள்ளனர். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 631 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 7.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 184 நிவாரண முகாம்களில் சுமார் 28,700 மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அசாம் மட்டுமின்றி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலும் வெள்ளத்தால் 35 பேர் பலியாகி, 7,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
இரு மாநிலங்களிலும் பேரழிவு ஏற்பட்டு மக்கள் உடைமைகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், வெறும் பார்வையாளராக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு போதிய அவசரகால நிதி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வழங்காமல் மக்களைக் கைவிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஒன்றிய அரசின் இந்த அலட்சியப் போக்கை விமர்சிக்கும் வகையில், பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு உணவு, மெத்தைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் அவசர மீட்பு உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன, எனவே அனைவரும் தாராளமாக நிதியுதவி வழங்கி மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கதறி முறையிட்டு நிவாரண நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
