சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்யுமாறு மனுதாரர் கீதா தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், திருத்த மனு தாக்கல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மனுதாரர் கீதாவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதேபோல திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எஸ்.ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே.சிவக்குமார், சீர்காழி மதிமுக எம்.எல்.ஏ. ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், அனைத்து வழக்குகளையும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
