மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி: இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள்

திருப்பரங்குன்றம்: மின்சாரத்துறை அமைச்சரின் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தில் நேற்று இரவு 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் தூக்கத்தை இழந்து அவதிப்பட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் உள்ளது. இந்த ஊர் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான நிர்மல்குமாரின் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்டது. இந்த நிலையில், கூத்தியார்குண்டு கிராமத்தில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் திடீரென மின்சாரம் நின்றது.

அதன்பின் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல்தான் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரவில் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து பெரும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அலுவலர்கள் போனை எடுத்து பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஒரு கட்டத்துக்கு மெல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். 5 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடையால் கிராம மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து அமைச்சர் நிர்மல்குமாருக்கும் வாட்ச் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மின்சாரத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மின்வெட்டால் தவிக்க வேண்டியுள்ளது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Related Stories: