ஆரணி : ஆரணி வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. அப்போது, கண்காணிப்பாளர் கஜா, மண்டல துணை வட்டாசியர் விஜயராணி வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஆர்டிஓ சிவா பொதுமக்கள், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, கூட்டத்தில் ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 4 தாலுக்காகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள், நில அளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், தமிழ்நிலத் திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, புதிய குடும்ப அட்டை, விஏஓ மற்றும் சர்வேயர் மீது புகார், 35 கிலோ அரிசி, நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க கோரி, வாரிசு சான்று, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க என மொத்தம் 93 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ சிவா பெற்று விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், வேளாண்மை அலுவலர்கள், மண்டல துணை தாசில் தார்கள், ஆர்ஐகள், வருவாய், வேளாண் துறை உள்ளிட்ட பிறதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செய்யாறில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்வு கூட்டம் சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துபட்டு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 12 பேரும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி 9 பேரும், பட்டா மாற்றம் கோரி 36 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 13 பேரும், கலைஞர் மகளீர் உரிமைத் தொகை கோரி 6 பேரும், முதியோர் உதவித் தொகை கோரி 5 பேரும், இதர மனுக்கள் என 33 பேரும், இதர துறை மனுக்கள் 25 உள்பட மொத்தம் 130 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த மனுக்கள் துறை வாரியாக நடவடிக்கைகளுக்கு அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வருவாய்துறை, ஊராட்சித்துறை அலுவலர்கள் என பலர் பங்கேற்று இருந்தனர்.
