* சேலம் மாநகராட்சி முன் திடீர் தர்ணா
* போலீசுடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
சேலம்: சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்க தவெக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கோட்டை மைதானத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். ஊர்வலமாக வந்த அவர்களை, ராஜாஜி சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கப்போவதாக தெரிவித்து முன்னோக்கி சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே இருபிரிவுகளாக பிரிந்த போராட்டக்காரர்கள், திடீரென மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி ஓடினர்.
போர்டிகோவிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர், மாநகராட்சியின் நுழைவாயில் முன்பு காலி குடத்துடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
