கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாசுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கரூர் சார்-பதிவாளர் 2024ல் அளித்த புகார் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் நகர காவல் ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக கரூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் எண்-1 நீதிபதி பரத்குமார் முன் எம்.ஆர்.விஜயபாஸ்கார் நேற்று ஆஜரானார். அப்போது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக உங்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார். அவரது வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
