*வாகன ஓட்டிகள் கோரிக்கை
கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே துவார் கல்லுப்பட்டி புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவார் ஊராட்சி அமைந்துள்ளது.
இந்த ஊராட்சியில் கல்லுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கல்லுப்பட்டி கிராமம் செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் ஏரளாமானோர் படித்து வருகின்றனர். கல்லுப்பட்டி சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக ஜல்லிகற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயகற்ற சூழ்நிலையில் தார்சாலை கிடக்கிறது. மேலும் அந்த சாலையில் மழைக்காலங்களில் மழை பெய்தால் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர்.
பல ஆண்டுகளாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துவார் ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலை விரைவில் சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி தார்சாலை அமைத்து செப்பனிட வேண்டும் என சமூக ஆர்வலர் துவார் ரெங்கராஜன் மற்றும் அனைத்து தரப்பினரும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
