மேலூரில் காவிரி குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

*பொதுமக்கள் வேதனை

மேலூர் : மேலூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சென்றதை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்தனர்.மேலூர்- சிவகங்கை சாலையில் திருவள்ளுவர் நகர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.

இந்த குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால் பல மணிநேரமாக உடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி சென்றதை கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஏற்கனவே போதிய மழையில்லாதது, கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த சூழலில் குழாய் உடைப்பு குறித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் அதனை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு குழாய் உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: