அம்ரோகா: உத்திரபிரதேசத்தில் ஒரே கேமராமேனை சகோதரிகள் மூவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம் ஹசன்பூரில் உள்ள மா சாமுண்டா கோயிலில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற சகோதரிகளான சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகிய மூவரும், தங்களிடம் கடந்த ஆறு மாதங்களாக புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். சிறுவயதிலிருந்தே பிரியாமல் ஒன்றாக வளர்ந்த சகோதரிகளுக்கு தனித்தனியாக மாப்பிள்ளை பார்க்க குடும்பத்தினர் முயன்ற நிலையில், பிரிந்து வாழ விருப்பமில்லாமல் தங்கள் சமூக வலைதள வீடியோக்களில் கணவராக நடித்து வந்த கேமராமேன் விகாஸையே மூன்று சகோதரிகளும் ஒன்றாக மணக்க முடிவு செய்தனர்.
இந்தத் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனங்களையும் மத அமைப்புகளின் எதிர்ப்பையும் சந்தித்த நிலையில், சகோதரிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், ‘நாங்கள் அனைவரும் சுயநினைவோடு விரும்பி எடுத்த முடிவு இது, தசரதன் மன்னருக்கு மூன்று மனைவிகள் இருந்தது போல நாங்களும் முழு சம்மதத்துடன் தான் இவரை திருமணம் செய்தோம்’ என்று கூறினர். இருப்பினும், 1955ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு இந்து ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது என்பதால் இந்த திருமணம் சட்டப்பூர்வமாக செல்லாது; எனினும் அனைவரும் வயது வந்த நபர்கள் என்பதாலும் குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதாலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
