கோவை : கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் உக்கடம், பெரிய கடை வீதி போக்குவரத்து எஸ்ஐ.,க்கள் அசரப் அலி, சுவாதி மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில் அதிகாரிகள் இணைந்து உக்கடம் பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களின் ஒலி அளவு டெசிபெல் மீட்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் எழுப்பிய 26 பஸ்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல அதிக ஒளி கொண்ட 70க்கும் மேற்பட்ட லைட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் காந்திபுரம் சிக்னல் அருகே சாலை விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகனங்களில் அதிக வெளிச்சம் தரும் ஹெட் லைட் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டினர்.
