நீட் விவகாரத்தில் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் பிரதமர் வாக்குறுதி: நயினார் நாகேந்திரன் வரவேற்பு

சென்னை: நீட் விவகாரத்தில் மாணவர் நலன் காக்கும் வகையில் பிரதமர் மோடி வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்று நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மாணவர்களின் வேதனையைப் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி வழங்கியுள்ள உறுதியான வாக்குறுதிகளையும், அதன் பின்னர் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் துரித நடவடிக்கைகளையும் முழுமனதாக வரவேற்கிறேன்.

வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக சிறையிலடைத்ததோடு, மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் தடுக்க துரிதமாக மறுதேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருப்பது மத்திய அரசின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேர்வு முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர மத்திய அரசு எடுத்துள்ள படிநிலைகள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய ‘விரைவு நீதிமன்றங்கள்’அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விரைவு நீதிமன்றத்துக்கு சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலேயே தேர்வு முறைகேடுகளுக்கு கடுமையான தடையையும் தண்டனையையும் வழங்கும் புதிய மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.

மேலும், கல்விச் சீர்திருத்தங்களுக்காக போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திரசிங் முன்னிலையில் அரசு வழங்கிய புதிய உத்தரவாதங்களை ஏற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார். மாணவர்களின் குரலுக்கு மதிப்பளித்து அரசு வழங்கி வரும் இந்த தீர்வுகள் மற்றும் துரித சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: