புதுடெல்லி: “இந்தியாவில் 2014க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2014ல் 387ஆக இருந்த நிலையில் தற்போது 844ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 51,348லிருந்து 1,39,489ஆக அதிகரித்துள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 31,185லிருந்து 86,360ஆக அதிகரித்துள்ளது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட வசிப்பிட திட்டம், முதுகலை மாணவர்கள் தங்கள் பயிற்சியின்போது ஒரு பகுதியாக மாவட்ட மருத்துவமனைகளில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
