விருதுநகர்: காரியாபட்டி அருகே சூரனூரில் தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 41 ஏக்கர் ஒதுக்கீடு என தகவல் வெளியாகி இருக்கிறது. தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி காரியாபட்டி துணை தாசில்தார் ஜெயராஜ் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளும் தனியார் நிறுவன அதிகாரிகளும் நிலத்தை அளவீடு செய்ய போலீசாரின் பாதுகாப்புடன் வந்துள்ளனர்.
அப்பொழுது கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சோலார் திட்டம் அமைக்க உள்ள பகுதி விவசாய நிலம், கண்மாய் நீர்வரத்து பாதையை தனியார் நிறுவனத்திற்கு வழங்க கூடாது என கூறி கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த சோலார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்மாய்க்கு நீர்வரத்து தடை செய்யப்படும். விவசாய நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் எனவும் கூறி நிலத்தை அழகா மறுப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் நில அளவைக்கு சென்ற அதிகாரிகளை கற்கள் உள்ளிட்டவை வீசி கிராம மக்கள் விரட்டி அடித்தனர். பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் கிராம மக்களை தடுத்து அதிகாரிகளை காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
