இந்தியாவில் சாலை விபத்துகளால் 1.83 லட்சம் பேர் உயிரிழப்பு: நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

டெல்லி: இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில், 2025-இல் உயிரிழப்புகள் 3.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3% உயர்ந்து 5,13,563 ஆகப் பதிவாகியுள்ளது.

நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் அதில் 21 பேர் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்துக்கு அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. சாலை விபத்து மரணங்களில் உத்தரப்பிரேதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம்  இடத்திலும் உள்ளன.

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு 24,118-லிருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.

பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளன.

பீகார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.

 

 

Related Stories: