தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின் போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார். காவல்துறை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் அரசு மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்திய பிறகு, சிறப்பு மருத்துவர்கள் தலைமையில் அருணாச்சலத்தின் உடல் இன்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது. சுமார் 2 மணிநேரம் செய்யப்பட்ட உடற்கூராய்வு விடியோவாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருணாச்சலத்தின் குடும்பத்திடம் நீதிபதி உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து அருணாச்சலம் உடலைப் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மகன் கொடுத்த வாக்குமூலத்தின்படி 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
