பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மகேஸ்வரி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி என்ற தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பழநி அடிவாரம் போலீசார், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இரண்டு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், செய்தியாளர் சந்திப்பில் சிறிய தவறு நடந்தது போல் பேசுகிறார்கள்.

தமிழக சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டால் விசாரணை நேர்மையாக இருக்காது. எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: