திருப்பரங்குன்றம் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்திருந்தன.
இதையடுத்து, இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், காலை 11.40 மணியளவில், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் நோக்கிச் சென்ற ரயில் திருப்பரங்குன்றம் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலிலிருந்து திடீரென இறங்கிய மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில்நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
காவல்துறையின் தடுப்பையும் மீறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேலாக மாணவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இந்த ரயில் மறியல் போராட்டத்தை ஒட்டி திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
