ஊத்துக்கோட்டை: தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பாலேஸ்வரம் தடுப்பணையால், விவசாயம் செய்ய முடியமாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழைநீர் நிரம்பியதும் அந்த தண்ணீர் ஆரணியாற்றில் திறக்கப்படும் அவ்வாறு திறக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அதை தடுப்பதற்கு பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த 2007ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அன்று முதல் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அந்த தண்ணீர் விவசாயத்திற்காக ராள்ளபாடி வழியாக சின்னம்பேடு ஏரிக்கு செல்லும் இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர். இந்நிலையில், மழை பெய்து போதுமான தண்ணீர் இல்லாததால் தற்போது பாலேஸ்வரம் தடுப்பணை வறண்டு காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மழை பெய்து பாலேஸ்வரம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் அந்த தண்ணீர் விவசாயத்திற்காக ராள்ளபாடி வழியாக சின்னம்பேடு ஏரிக்கு செல்லும். ஆனால், தற்போது தண்ணீர் இல்லாமல் தடுப்பணை வறண்டு கிடப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்றனர்.
