திருத்தணி: முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏவை இரவோடு இரவாக அதிரடி கைது நடவடிக்கை தேவையற்றது என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை திருத்தணி முருகன் கோயிலில் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் முருகப்பெருமானுக்கு 6 அடி உயரம் கொண்ட வெள்ளிவேல் காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து தங்கதேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள முருகன் கோயில் நிலம் அபகரிப்பு தொடர்பாக தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். கோயில்களை பொறுத்தவரை குடிநீர், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டது தேவையற்றது.
இதுபோன்ற கைது நடவடிக்கை முதலமைச்சர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்லியில் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசு மதித்து செயல்படவேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக முதல்முதலில் குரல் கொடுத்தேன். எதை பார்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். குதிரை பேரம் நடக்கிறதா? பணம் பதவியை பார்த்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா? என்ற கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு, அறிவிக்கப் படாத மின் கட்டண உயர்வை தமிழக முதல்வர் திரும்பபெறவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவ சாயிகள் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்து ரீல் லைப்பில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
