தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக வெற்றி: தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு கடும் போட்டி

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மொத்தம் 25 உறுப்பினர்கள். இதில் 2 உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படவுள்ளனர். மீதமுள்ள 23 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30ம்தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 23 உறுப்பினர் பதவிகளில் 5 பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் 143 வழக்கறிஞர்கள் போட்டியிடனர்.

தமிழகத்தில் 166 வாக்குச்சாவடி மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் என மொத்தம் 168 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் 81 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. மே மாதம் முதல் வாரம் முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னுரிமை வாக்குகள் அடிப்படையில் முதலில் 3,001 வாக்குகள் பெறும் நபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்கள். அந்த வகையில், 86 நாட்களாக நடந்து வந்த வாக்கு எண்ணிக்கை நேற்று நிறைவு பெற்றது.

வழக்கறிஞர்கள் சி.பரணிதரன், பி.எஸ்.அமல்ராஜ், இ.பாலமுருகன், டி.மைக்கேல் ஸ்டாலின் பிரபு, ஆர்.அய்யாவு, வே.கார்த்திகேயன், கே.கதிரவன், டாக்டர் என்.விஜயராஜ், எம்.அருள்முருகன், கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, ஆர்.சி.பால்கனகராஜ், கே.தமிழ்வாணன், இரா.கிரிராஜன், கே.பாலு, எம்.ராஜேந்திரகுமார், ஜி.தாழமுத்தரசு, எம்.வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட 18 ஆண் வழக்கறிஞர்கள், டி.பிரசன்னா, ஆர்.விஜயலட்சுமி, பி.சாவித்ரி, எல்.சுமதி, எ.ராஜேஸ்வரி ஆகிய 5 பெண் வழக்கறிஞர்கள் என 23 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வர். இதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் பன்முனை போட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: