*திருப்பத்தூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்
திருமலை : பீலேருவில் காரில் 11 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், கே.வி.பள்ளி- பீலேரு சாலையில் உள்ள பொந்தல செருவு சந்திப்பில் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்பி சீனிவாஸ், உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெ. குலசேகர் மேற்பார்வையில், டிஎஸ்பி ஷெரீப், உதவி வனத்துறை இன்ஸ்பெக்டர் கே. மகேஸ்வர நாயுடு, வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி ஒரு கார் அதிவேகமாக வந்தது. அதிரடிப்படையினரைக் கண்டதும் காரில் இருந்தவர்கள் காரை தொலைவில் நிறுத்திவிட்டு வெளியே இறங்கித் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், அதிரடிப்படையினர் அவர்களைத் துரத்திச் சென்று இருவரை பிடித்தனர். இதற்கிடையில் மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில், பிடிப்பட்ட இருவரும் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் காரில் 11 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் செம்மரக்கட்டை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
