சென்னை: நான் ஊட்டி வளர்த்த திமுக இளைஞர் அணி, 47வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.மதுரை மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பூங்காவில், 1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, திமுக இளைஞர் அணி என்கிற சார்பு அணியை கலைஞர் தொடங்கி வைத்தார். இதற்கு முதல் செயலாளராக பொறுப்பேற்று சுமார் 20 ஆண்டுகள், இளைஞர் அணியைக் கட்டி எழுப்பிய பெருமை, இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அத்தகு சிறப்பு வாய்ந்த இளைஞர் அணியை, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று, இளைஞர்களை வழிநடத்திச் செல்கிறார்.
இந்நிலையில், திமுக இளைஞர் அணி இன்று (நேற்று) (ஜூலை 20) 47ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த திமுக இளைஞர் அணி, 47வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் என கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
