புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: தென்மாநிலங்களுக்கு பிரச்சனை வரக்கூடிய வகையில் தொகுதி மறுவரையறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக கடுமையாக எதிர்க்கும்.
அதேபோன்று தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு தொகுதிகளை அதிகப்படுத்தினால் தென் மாநிலங்களில் குரல் முழுமையாக அடிப்பட்டு போகும். குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடந்தால் தென்மாநிலங்களின் குரல் மிகவும் நசுங்கிவிடும். மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் தொகுதிகளை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம்
மேலும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் எந்த ஒரு கூட்டத்திலும் திமுகவினர் கலந்து கொள்ள மாட்டோம். அதேபோன்று காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் திமுக கலந்து கொள்ளாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
