அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முக்கிய கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை திருட்டு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், கடந்த 13ம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ராமர் கோயிலுக்கு தலைமை செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை மறுதினம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு கோயில் வளாகத்தில் ஒரு சிறப்பு கூட்டமும், அதை்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாசின் இருப்பிடமான மணிராம் சாவ்னில் மற்றொரு கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களில், ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை பற்றியும், அறக்கட்டளை விதிகளின்படி பல்வேறு குழுக்களை மறுசீரமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் வியாழக்கிழமை(23ம் தேதி) அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாசின் இருப்பிடமான மணிராம் சாவ்னில் துறவிகள் மாநாட்டை நடத்த ஆர்எஸ்எஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Related Stories: