- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை விமான நிலையம்
- திமுக
- Meenambakkam
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- லண்டன்
- துர்கா ஸ்டாலின்
- பல்கலைக்கழகம்
மீனம்பாக்கம்: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 4ம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொண்டு, உயர்கல்வி பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை உச்சிமுகர்ந்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை லண்டன் விமானநிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு, துபாய் வழியாக இன்று காலை சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் வந்திறங்குவதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அவர்கள் லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் துபாய் மற்றும் சென்னைக்கு வந்து சேருவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னைக்கு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக் கொடிகளுடன் குவிந்திருந்தனர். மேலும், பேண்டு வாத்தியக் குழுவினரும் வந்து மங்கள இசையை வாசிக்கத் துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை விமானநிலைய போலீசார் விரைந்து வந்து, சென்னை விமானநிலைய வளாகத்துக்குள் வாத்தியங்கள் இசைப்பதற்கு அனுமதியில்லை என்று தடை விதித்து, பேண்டு வாத்திய குழுவினரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஒன்றுகூடி, திமுகவின் முக்கிய தலைவர்களின் வருகையின்போது நாங்கள் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இப்போது ஏன் திடீரென தடை போடுகிறீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
