திருப்பதி கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் புஷ்ப பல்லக்கில் மலையப்பசுவாமி பவனி

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நேற்று மலையப்பசுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானம், செலவு, கையிருப்பு போன்றவற்றின் ஆண்டு கணக்குகள் ஒவ்ெவாரு ஆண்டும் சம்பிரதாய முறைப்படி ஆனிவார ஆஸ்தானத்தில் சமர்பிக்கப்படும். அப்போது பழைய கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனிவார ஆஸ்தானம் நேற்று நடைபெற்றது. நித்ய பூஜைகள் முடிந்து மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சர்வபூபால வாகனத்தில் கருட மண்டபத்தில் எழுந்தருளினர். அதேபோல் சுவாமியின் படைத்தளபதியான விஸ்வக்சேனாதிபதி எழுந்தருளினார்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஒப்படைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் மூலவருக்கும் உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கணக்கு, வழக்குகள் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் புஷ்ப பல்லக்கில்எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மலையப்பசுவாமியை தரிசனம் செய்தனர்.

* 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,096 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,562 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.3.66 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.98 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related Stories: