சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. ஆனால், மாலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பொழிந்தது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி ஆகிய 10 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
