மாத்தூர் பகுதியில் இரவில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் மின்தடை மக்கள் சாலை மறியல்: சுங்கச்சாவடியை முற்றுகை: அரசுக்கு எதிராக கோஷம்

மணலி: வடசென்னைக்கு உட்பட்ட மாதவரம், கொசுப்பூர், சென்றம்பாக்கம், செட்டிமேடு, விளாங்காடுபாக்கம் மற்றும் செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலி, பால்பண்ணை, எம்.எம்.டி.ஏ மற்றும் வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் மாணவ, மாணவிகள், நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாத்தூர் ஆம்ஸ்ட்ராங் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதால், கடும் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து மாத்தூர் எம்எம்டிஏ மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என என்று தெரிகிறது. இதனால் ஆத்திரடைந்த அப்பகுதி மக்கள், கொசப்பூர் – மாத்தூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதன்பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், ‘மின்சாரம் சும்மாவா தருகிறீர்கள், மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கிறீர்கள்… ஆனால் அடிப்படை தேவையே சீராக வழங்க முடியவில்லையா’’ என்று கோஷமிட்டனர். தகவலறிந்த போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: