இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சிக்கினர்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பைக் பறிமுதல்

சென்னை: இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அடையாறு இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம் அருகே, ராஜிவ்காந்தி சாலையில், விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதைதொடர்ந்து, மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் (22) மற்றும் முகமது உசேன் (22) என்ற கல்லூரி மாணவர்கள் இந்த பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related Stories: