திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் வித்யா பாலகிருஷ்ணன். இவர் சைபர் கிரைம் போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பது: கடந்த சில தினங்களுக்கு முன் என்னுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் ராஜ்குமார் என்றும், பிரியங்கா காந்தி எம்பியின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறினார்.
கேரளத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாகவும், ரூ. 3 கோடி தந்தால் என்னை அமைச்சராக்குவதாகவும் அந்த நபர் கூறினார். ஒரு காங்கிரஸ் எம்பி தான் என்னுடைய நம்பரை தந்ததாகவும் அவர் கூறினார். அந்த எம்பியை நான் தொடர்பு கொண்டபோது, ஒரு நபர் என்னுடைய நம்பரை கேட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வித்யா பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
