இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்திற்கு எதிரான எப்சிஆர்ஏ திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: எஸ்டிபிஐ தேசிய செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் மைசூரில் நடந்தது. தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி தலைமை தாங்கினார். 2 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, வரவிருக்கும் தேர்தல்கள், கட்சியின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விடுபட்ட தகுதியுள்ள அனைத்து குடிமக்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குறித்து ஆழந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் மிக முக்கியமான ஒரு போட்டி தேர்வின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க அரசு தவறிவிட்டதையே இச்சம்பவம் காட்டுகிறது. இந்தச் சர்ச்சை லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரிடையே பெரும் கவலையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீட் தேர்வு நெருக்கடியால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதும், கடுமையான உளவியல் பாதிப்புக்கு உள்ளானதும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. எனவே, இந்தத் தோல்விக்கு மத்திய கல்வி அமைச்சர் அரசியல் மற்றும் நெறிமுறை ரீதியாகப் பொறுப்பேற்று, உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்திற்கு எதிரானவை. எனவே, எப்சிஆர்ஏ திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். வெளிப்படைத்தன்மையைக் கண்காணிக்கும் அதே வேளையில் தொண்டு நிறுவனங்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறையையே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுபான்மையினரை குறிவைக்கும் புல்டோசர் நடவடிக்கை, மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்து, வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: