கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மீது பாஜக பஞ்சாயத்து பொறுப்பாளர் ஒருவர் முட்டைகளைத் தேய்த்து அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிதினாப்பூர் மாவட்டம் திகா பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான மானஸ் தாஸ் என்பவரை வழிமறித்த பாஜக பஞ்சாயத்து எதிர்க்கட்சித் தலைவர் சுப்ரதா ஜனா, அவரது முகத்தில் முட்டைகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டதோடு, இது ‘அரசு உத்தரவு’ என்று கூறிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியபோது, தான் அரசு உத்தரவின்படியே செயல்படுவதாகக் கூறிய சுப்ரதா ஜனா, பின்னர் தனது விளக்கத்தில், ‘வங்க மொழியில் சர்க்கார் என்றால் மந்திரவாதி பி.சி. சர்க்காரைக் கூட குறிக்கலாம்; நான் மானஸ் தாஸ் மீது முட்டைகளை வீசவில்லை, அவரது முகத்தில் முட்டையை தேய்த்தேன்; முதியவரான அவரது சுருங்கிய தோலுக்கு முட்டையில் உள்ள வைட்டமின்கள் தேவைப்படுவதால் அப்படிச் செய்தேன்; அவர் என் மீது சுமத்திய பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பொய் வழக்குகளுக்காகவும், அவரது ஊழல்களுக்காகவுமே இவ்வாறு நடந்துகொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளைக் குறிவைத்து கடந்த மே மாதத்தில் இருந்து அரங்கேறி வரும் இத்தகைய முட்டை வீச்சு சம்பவங்கள் மனிதத்தன்மையற்றது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில், ‘பாஜகவினர் தங்கள் அராஜகத்தை நியாயப்படுத்த வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்; புகார்கள் இருந்தால் அவர்கள் ஏன் போலீசாரிடம் செல்லவில்லை?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
