காஞ்சிபுரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மண்டல பொறுப்பாளர்கள் சூ.க.ஆதவன், கதிர்நிலவன், வக்கீல் தமிழ்மாறன், இரா.செல்வம், லூதர் கார்த்திக், அம்பேத்கர் வளவன் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் விப்பேடு அருள்நாதன் வரவேற்றார். கூட்டத்தில், கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் நிதி வழங்கி பேசியதாவது: சாமி கும்பிடுவது என்பது நம்பிக்கை. ஆனால் உயர்வு, தாழ்வு என்பது மக்களை பிளவுப்படுத்துகிறது. திருமாவளவன் தடுமாற்றத்துடன் பேசுகிறார் என கூறுகிறார்கள். சனாதன எதிர்ப்பில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். திமுக கூட்டணி தோல்வி அடைந்ததில் எனக்கு வருத்தம் இருக்கிறது.
திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜ நினைக்கிறது. இது பெரியார் காலத்திலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி, ஆட்சியின் உயர்வு தாழ்வுகளை அகற்றுதல், சாதி ஒழிப்பு போன்ற காரணங்களை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள் சந்தித்து கொண்டதை பற்றி ஏன் யாரும் விவாதம் நடத்தவில்லை. ஆனால் திருமாவளவன் திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள். திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை. அதைவிட அதிமுக கண் முன்னரே சிதைத்து விடுகிறார்கள் என்பது ஒரு கவலை. திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்திலிருந்து ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது, தனிப்பட்ட முறையில் பாஜ மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் கருத்தியல் என்பது வேறு. எனது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் இருந்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு நான் நன்றி என்று சொன்னேன். சிறிது நேரத்தில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினும் போன் செய்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பாஜவின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது வேறு. தனிநபர் உறவு என்பது வேறு. நீங்கள் ஆதரவு கொடுத்து விட்டீர்கள். திமுக கூட்டணி தொடர்கிறது என்கிறீர்கள். அப்படி என்றால் அங்கே ஒரு கால், இங்கே ஒரு காலா என்கிறார்கள். இது தமிழக அரசியல் பாலிடிக்ஸ். அதாவது இங்கு போனால் அங்கு பேச கூடாது என்பது. ஜெயலலிதா இருந்தபோது அதிமுக தலைவர்கள் யாராவது நம்மை பார்த்தால் ஓட்டம் பிடித்து விடுவார்கள். ஏனென்றால் போட்டோ எடுத்து அனுப்பி விடுவார்கள். அப்படி மிரட்டி வைத்திருந்தார்கள். இந்த அரசியல் அதிமுக, திமுக தொண்டர்களிடையே இருந்துள்ளது.
அது இன்னும் இருக்கிறது. அதை உடைத்தவர் திருமாவளவன் கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது? இவ்வாறு அவர் பேசினார். இதில், முன்னாள் எம்எல்ஏ பாலாஜி, சு.க.விடுதலைசெழியன், வக்கீல் பார்வேந்தன், மண்டல துணை அமைப்பாளர் மதி ஆதவன், தி.வா.எழிலரசு, தென்னவன், கனல்விழி, பாசறை செல்வராஜ், மேனகா தேவி கோமகன், செங்கை தமிழரசன், வக்கீல் எஸ்.சந்திர சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
