மின் வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடிய வழக்கு பெங்களூரு கம்ப்யூட்டர் நிறுவன அதிபருக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியர் கோபிநாத், பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் முரளி மனோகர் கைது செய்யப்பட்டனர்.

முரளி மனோகர் ஜாமீன் மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவரது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி கார்த்திகேயன், குற்றம் சாட்டப்பட்ட முரளி மனோகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: