கிணற்றில் விழுந்த கோழியை மீட்க சென்ற விவசாயி பலி

 

நாமகிரிப்பேட்டை, ஜூலை 8: நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த கோழியை மீட்க சென்ற விவசாயி, தலையில் அடிபட்டு பரிதாபமாக பலியானார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த மலையாம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது தோட்டத்தை, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(60) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் விவசாய தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் கோழி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த கோழியை மீட்பதற்காக அன்பழகன் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்க முயன்றுள்ளார். அப்போது, கயிறு நழுவியதில் அன்பழகன் கிணற்றில் உள்ள மோட்டார் பெட்டில் கால் மாட்டிக் கொண்டு தலையில் பலத்த அடிப்பட்டு கிணற்றிலேயே உயிரிழந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி அன்பழகன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழியை மீட்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: