காரியாபட்டி அருகே குண்டாற்று பாலத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி இரண்டு பேர் படுகாயம்

காரியாபட்டி, மார்ச் 12:  சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார்(35). இவரது தாய் சுப்புலெட்சுமி (60), மனைவி ஸ்ரீஜெயந்தி (30), மகன் விசாந்த் சவுரியா (10 மாதம்) ஆகியோர் காரில் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம்புதூருக்கு குலசாமி கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வக்காணங்குண்டு குண்டாறு அருகில் நிலைதடுமாறிய கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதனால் இரடண்டு பாலத்திற்கும் இடையில் கார் கவிழ்ந்தது. தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையிலான மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை தீயணைப்பு, பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதில் சுப்புலெட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஷ்குமார், அவரது மனைவி ஸ்ரீஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். குழந்தை சவுரியா சிறு காயமின்றி உயிர் தப்பியது. அவர்கள் மூவரையும் மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்புலெட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சரவணன் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் காயமின்றி உயிர் தப்பினார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: