ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில், தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் மற்றும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதையடுத்து நேற்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் கெலவரப்பள்ளி அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் இடம் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் செல்லும் இடங்களை பார்வையிட்டார். பின்னர், அமைச்சர் ராஜீவ் அளித்த பேட்டியில், `ரசாயன நுரையின் பாதிப்பு குறித்து கர்நாடகாவுடன் பேசி சுமுக தீர்வு காணப்படும். பெங்களூருவில் இருந்து 1400 எம்.எல்.டி கழிவுநீர் வந்து கொண்டிருக்கிறது.
இதை சுத்திகரிக்க 40 எஸ்டிபி (கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்) வேண்டும், தற்போது 26 எஸ்டிபி மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எஸ்டிபி அமைக்க வலியுறுத்தி வருகிறோம். அதை அமைத்தால் நுரை குறையும். தமிழக முதல்வர் அறிக்கை கேட்டுள்ளார். அதனால் தான் தற்போது வந்து ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பிறகு முழு அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும். தமிழக முதல்வர், கர்நாடகாவுடன் பேசி சுமுகமான தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்’ என்றார்.
