குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கு; தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது: சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக பொதுமக்களிடம் ரூ.20 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை இன்று காலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர், தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும், குறைந்த விலைக்கு தங்க காசுகள் வாங்கி தருவதாக போலீசார் மத்தியில் அவரது கார் டிரைவரும் நெருங்கிய உறவினர் பிரபுமணி என்பவரை அறிமுகம் செய்தார். அதன் மூலம் 3 விதமாக தங்க முதலீடு திட்டங்களை அறிமுகம் செய்து, பெண் இன்ஸ்பெக்டர் அவரது காரிலேயே பிரபு மணியை அழைத்து சென்று பொதுமக்கள் மற்றும் போலீசாரை முதலீடு செய்ய வைத்தார்.

அதன்படி கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் காவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணத்தை பிரபு மணி நிறுவனத்தில் கட்டி வந்துள்ளனர். ஆனால் சொன்னபடி யாருக்கும் தங்க காசுகள் தரவில்லை. இதனால் பணம் கட்டிய காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்க காசு கேட்டுள்ளனர். அதற்கு பிரபு மணி தங்க காசு வாங்க கொடுத்த தங்க நகை வியாபாரம் செய்யும் நபர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் திடீரென பிரபுமணியும் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் காவலர் குடும்பங்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மற்றும் அவரது கார் டிரைவர் பிரபுமணி மீது புகார் அளித்தனர். அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி யோசனைப்படி அவரது கார் டிரைவர் பிரபுமணி பொதுமக்களிடம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், அந்த மோசடி பணத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் பிரபுமணியும் திருமண மண்டபம் மற்றும் பல இடங்களில் கல்குவாரிகள் வாங்கி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பிரபுமணி, இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 10ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக பிரபுமணியை கைது செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து சென்னை காவல்துறை அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் தன்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி தலைமறைவாகிவிட்டார்.

அதைதொடர்ந்து, அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், சென்னை அருகே இன்று அதிகாலை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவரது சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தங்க காசு மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: