பெரம்பலூர்,மார்ச் 12: பெரம்பலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விடிய விடிய சிவ பக்தர்கள் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.பெரம்பலூரில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்றிரவு மகா சிவ ராத்திரியை முன்னிட்டு 5 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கோயில் குருக்களான சாமிநாத சிவாச்சாரியார் முன்னின்று நடத்தினார். முதல்கால பூஜை இரவு 7.31 மணிக்கு தொடங்கியது. விடிய விடிய பூஜைகள் நடைபெற்றன. 5ம் கால பூஜை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. 5 கால பூ ஜைகளுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரருக்கு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூர், எளம்பலூர், விளாமுத்தூர், அரணாரை, நொச்சியம், கவுல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.