அறந்தாங்கி, மார்ச் 10: இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் பலியான வழக்கு கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாயமானோர் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த மெர்சியா, உச்சிப்புளியை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், மண்டபத்தை சேர்ந்த ஜாம் உள்ளிட்ட 4 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு சென்றனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தங்களது கப்பலை மோதியதில் 4 மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.