சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் டிவிஏசி என்னும் கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரகம் மேற்கொண்டுள்ள சோதனைகள் வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கும், அமைப்பாற்றலும் கொண்ட தலைவர்களை அரசியல் ரீதியாக முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒன்றிய மற்றும் மாநில ஆட்சிகள் பல்வேறு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கவும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், ஜனநாயகத்தை விசாரணை அமைப்புகளின் மூலம் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அரசியல் வேட்டையாடும் போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதிகாரம் நிரந்தரமல்ல; ஆனால் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
